| Scorecard: | India v Sri Lanka |
| Player: | MS Dhoni |
| Event: | Asia Cup 2008 |
DateLine: 4th July 2008
போட்டி: 50 ஓவர்கள் போட்டி (பகலிரவுப் போட்டி)
இடம்: நேஷனல் மைதானம். கராச்சி, பாகிஸ்தான்.
தேதி: 03.07.2008. வியாழக்கிழமை.
மோதிய அணிகள்: இலங்கை அணி - இந்திய அணி
முடிவு: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
ஆட்ட நாயகன்: மஹேந்திரசிங் தோனி
வணக்கம்
 
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்குள் இந்திய அணி அசத்தலாக முன்னேறியது. இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பாகிஸ்தான் அணியின் கனவு தகர்ந்தது. இதையடுத்து, வரும் 6ம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. 
பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த சூப்பர்-4 சுற்று போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இது இந்தியாவுக்கு வாழ்வா...சாவா போட்டியாகும். இதில் வென்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இக்கட்டான நிலையில் இந்திய அணி களமிறங்கியது. 
இந்திய அணியின் சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய யூசுப் பதான், பியுஸ் சாவ்லா ஆகியோர் நீக்கப்பட்டு, ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா ஆகியோர் வாய்ப்பு பெற்றனர். 
ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு இலங்கை அணி தகுதி பெற்று விட்டதால் சமிந்தா வாஸ், அஜந்தா மெண்டிஸ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, தில்ஹாரா பெர்னாண்டோ, கவுசல்யா வீரரத்னே இடம் பெற்றனர். 
பூவா தலையா வென்ற இலங்கை அணியின் கேப்டன் மஹேல ஜெயவர்தனே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி சனத் ஜெயசூர்யாவும், குமார் சங்ககாராவும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். 
இலங்கை அணிக்கு இம்முறை அதிரடி துவக்கம் கிடைக்கவில்லை. இத்தொடரில் சதம் மேல் சதம் அடித்து வந்த குமார் சங்ககரா வெறும் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதற்கு பின் சனத் ஜெயசூர்யா, மஹேல ஜெயவர்தனே இணைந்து அசத்தினர். அதிரடியைக் காட்டிய ஜெயசூர்யா 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பந்துவீச்சில் வெளியேறினார். அபார ஆட்டத்தை தொடர்ந்த ஜெயவர்தனே 46வது அரைசதம் எட்டினார். இவர் 50 ரன்களுக்கு பிரக்யான் ஓஜா சுழலில் வீழ்ந்தார். 
இவர்களையடுத்து கபுகேதராவும், சமர சில்வாவும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அசத்தலாக ஆடிய கபுகேதரா அரைசதம் கடந்தார். வீரேந்திர ஷேவாக் சுழலில் ஒரு இமாலய சிக்சர் அடித்த இவர் 78 பந்துகளில் 75 ரன்களுக்கு பிரவீண் குமார் வேகத்தில் வெளியேறினார். சமரசில்வா 50 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 
தில்ஷான் 15 ரன்களிலும், வீரரத்னே 23 ரன்களிலும் விரைவாக வெளியேறினர். கடைசி கட்டத்தில் திலன் துஷாரா அதிரடியாக விளையாடினார். இர்பான் பதான் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி விளாசிய இவர் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். 
இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்தது. 
கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கௌதம் காம்பீர், வீரேந்திர ஷேவாக் இணைந்து அதிரடி துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்த நிலையில், வீரேந்திர ஷேவாக் 33 பந்துகளில் ஒரு சிக்சர், 6 பவுண்டரிகள் உள்பட 42 ரன்கள் எடுத்திருந்தபோது குலசேகரா வீசிய அகலப்பந்தை தேவையில்லாமல் தொட்டு, தில்ஹாரா பெர்னாண்டோவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். 
ஒரு நாள் அரங்கில் 11வது அரைசதம் கடந்த கௌதம் காம்பிர் 11 பவுண்டரிகள் உள்பட 68 ரன்கள் எடுத்திருந்தபோது முரளிதரன் சுழலில் ஆட்டமிழந்தார். 
பின்னர் சுரேஷ் ரெய்னாவும், மஹேந்திரசிங் தோனியும் இணைந்து அணியின் எண்ணிக்கையை அற்புதமாக உயர்த்தினர். 5-வது அரைசதம் கடந்த ரெய்னா 54 ரன்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 22வது அரைசதம் கடந்த தோனி 62 பந்துகளில் 5 பவுண்டரிகள், 1 சிக்சர் உள்பட 67 ரன்கள் எடுத்திருந்தபோது, முரளிதரன் சுழலில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார். இவர்களையடுத்து ஆடிய யுவராஜ் சிங், ரோஹித் சர்மா ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தது. இந்திய அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 
யுவராஜ் சிங் 36 ரன்களுடனும், ரோஹித் சர்மா 22 ரன்களுடணும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இப்போட்டியில் வெற்றிபெற்றதால் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. ஆட்டநாயகன் விருதை தோனி தட்டிச் சென்றார். 
இதையடுத்து வரும் 6ம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மீண்டும் மோதுகின்றன. இதிலும் தோனியின் தலைமையிலான இந்தியப்படை சாதித்து, கோப்பை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். 
@இன்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மஹேந்திரசிங் தோனி, இலங்கை வீரர் சங்ககாரா தட்டிவிட்ட பந்தை பாய்ந்து பிடித்து அவரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் 150 விக்கெட்டுகளின் வீழ்ச்சிக்கு காரணமான இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். 154 விக்கெட்டுகளின் வீழ்ச்சிக்கு உதவி புரிந்த நயன் மோங்கியா முதலிடத்தில் உள்ளார். 
@இன்று 36வது ரன் எடுத்த போது இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா ஒரு நாள் போட்டிகளில் 1,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டினார். 
@இன்று தனது 100வது ஒரு நாள் போட்டியில் விளையாடிய இர்பான் பதான் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். 10 ஓவர்கள் வீசிய இவர் 80 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் மோசமாக பந்துவீசிய ஐந்தாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற வேதனையான சாதனையை ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் அபய் குருவில்லாவுடன் பகிர்ந்து கொண்டார். 
@இந்தியா, இலங்கை அணிகள் இன்று 100வது முறையாக ஒரு நாள் போட்டியில் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியது. 
நன்றி, வணக்கம்.LATEST SCORES
CURRENT EVENTS
- Bahrain in Bhutan 2025/26
- England in Australia 2025/26
- Ireland Women in South Africa 2025/26
- Oman Women's International T20 Tri-Series 2025/26
- South Africa in India 2025/26
- South East Asia Games Men's Twenty20 Competition 2025/26
- South East Asia Games Women's Twenty20 Competition 2025/26
- Sri Lanka Women in India 2025/26
- West Africa Trophy 2025/26
- West Indies in New Zealand 2025/26
- Women's Gulf Cup 2025/26
View all Current Events CLICK HERE


